வடலூர், டிச. 5: கடலூர் மாவட்டம் வடலூரில் சனிக்கிழமை தோறும் வார சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு காய்கறி, பழங்கள், ஆடு, மாடு, கோழி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. வடலூர் நகர் பகுதியை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சந்தையை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் முறையான பராமரிப்பின்றி இருக்கும் சந்தையால், பொதுமக்களும், வியாபாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
குறிப்பாக, மழைக்காலங்களில் சந்தை சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சந்தைக்கு செல்லவே யோசனை செய்கின்றனர். வியாபாரிகளும் வியாபாரம் செய்ய சிரமப்படுகின்றனர். வார சந்தையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகளுக்கு கூடாரம் அமைத்து தர வேண்டும். போக்குவரத்து இடையூறாக சாலையோரங்களில் கடை வைப்பதற்கு அனுமதி அளிக்கக்கூடாது, வாரச்சந்தையில் இடவசதியை அதிகப்படுத்தி தர வேண்டும், அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.