திட்டக்குடி அருகே கழுத்தறுத்து கொத்தனார் கொலை?

திட்டக்குடி, நவ. 27:  திட்டக்குடி அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் சடலமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வையங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சித்ரா (22). இவர் மணிகண்டனின் சொந்த தாய் மாமனின் மகள். இருவருக்கும் திருமணம் நடந்து 3 ஆண்டு ஆகின்றன. இவர்களுக்கு 2 வயதில் தர்ஷினி என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளது. சித்ரா கணித பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருந்தார். ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில் அதற்குரிய தேர்வு திட்டக்குடியில் நடந்தது. அதை எழுதுவதற்கு நேற்று காலை சித்ராவை திட்டக்குடிக்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்கு வந்த மணிகண்டன் வீட்டில் படுத்து தூங்கினார். ஆனால் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது மணிகண்டன் படுக்கை அறையில் கழுத்து அறுக்கப்பட்டநிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி சித்ரா கொடுத்த புகாரின்பேரில் ஆவினங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பிரேதத்தை கைப்பற்றி திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லை என தெரிய வந்தது. இதனால் மணிகண்டன் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: