மன்னார்குடி, நவ. 27: மன்னார்குடி மற்றும் திருத்துறைபூண்டியிலிருந்து வேதபுரம் வரை வரும் பேருந்துகளை நாணலூர் வரை நீட்டிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள நாணலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் பெறவும் இதர பல்வேறு தேவைகளுக்கும் கிராம மக்கள் மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி செல்லவேண்டிய நிலையில் முறையான பேருந்து வசதிகள் இல்லாததால் மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களில் இருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளையும் நாணலூர் வரை இயக்குவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள், மாணவர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நாணலூர் கிராமமக்கள் கூறுகையில், நாணலூர், தேவதானம் பகுதிக்கென அனுமதிக்கப்பட்ட இரு அரசு பேருந்துகள் பல பயணநடைகளை வேதபுரம் வரை மட்டுமே இயக்கப்பட்டு மீண்டும் மன்னார்குடி செல்கிறது. அதுபோலவே திருத்துறைப்பூண்டி பேருந்தும் வேதபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. எனவே நாணலூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் வேதபுரம் வரை இயக்கப்படும் அனைத்து பேருந்துகளையும் நாணலூர் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.