தரங்கம்பாடி, நவ.22: கோயில் இடங்களில் வசிப்பவர்களுக்கு அரசே விலை கொடுத்து வாங்கி இலவச வீட்டு மனையாக வழங்க அரசு முடிவு செய்திருப்பதாக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார். நாகை மாவட்டம், திருக்கடையூரில் தரங்கம்பாடி வட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாகை கலெக்டர் பிரவின் பி.நாயர் தலைமையில் நடந்தது. மயிலாடுதுறை கோட்டாட்சியர் கண்மணி வரவேற்றார். பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் 1,113 பேருக்கு ரூ.8கோடியே 34லட்சத்து 8ஆயிரத்து 844 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் கோயில் இடங்களில் வசிப்பவர்கள் தான் அதிகம். கோயில் மனை என்பதால் அவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க முடியாத நிலை இருந்தது.