வேலூர், நவ.22: வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் 2ம் நிலை காவலர்களுக்கான 2ம் கட்ட உடற்தாங்கும் திறன் தேர்வு நேற்று தொடங்கியது. இதில் முதற்கட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடந்த 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 5,022 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தொடர்ச்சியாக 2ம் நிலை காவலர்களுக்கான தகுதித்தேர்வு கடந்த 6ம் தேதி வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. 5 கட்டங்களாக நடந்த ஆண் காவலர்களுக்கான தேர்வில் 2,695 பேர் 2ம் கட்ட தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் பெண் காவலர்களுக்கான தேர்வில் 834 பெண்கள் 2ம் கட்ட தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்நிலையில், 2ம் கட்ட உடற்தாங்கும் திறன் தேர்வு நேற்று காலை தொடங்கியது. மொத்தம் 800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 700 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். அவர்களுக்கு கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம் நடத்தப்பட்டது. இதை ஐஜி சாரங்கன், டிஐஜி காமினி, எஸ்பி பொறுப்பு விஜயகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.