நாமக்கல், நவ.22: நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரிக்கு, முதல்வரை தவிர வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் மனு அளித்து தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நேற்று கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. பாஸ்கர் எம்எல்ஏ முன்னிலை வகித்து பேசினார். இதில் மின்துறை அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு, 1,523 பயனாளிகளுக்கு ₹3.41 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: இந்தியாவிலேயே தமிழகத்துக்கு மட்டும் தான், 6 அரசு மருத்துவ கல்லூரிகளை மத்திய அரசு கொடுத்துள்ளது. இதற்கு முதல்அமைச்சர் தான் காரணம். நாமக்கல்லில் அரசு மருத்துவ கல்லூரி கொண்டு வந்ததற்கு, முதல்வரை தவிர யாரும் உரிமை கொண்டாட முடியாது. மருத்துவ கல்லூரி கொண்டு வந்த முதல்வருக்கு, இம்மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் பாராட்டு விழா நடத்த உள்ளனர். நாமக்கல்லில் அரசு மருத்துவ கல்லூரி அமையும் போது, சேலம், கோவை போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருக்காது. நாமக்கல் நகராட்சி புதிய குடிநீர் திட்டம் இன்னும் 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். கடந்த 8 ஆண்டில் இந்த மாவட்டத்தில் இதுவரை செய்யாத அளவுக்கு பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தங்கமணி பேசினார்.