கோவை, நவ.22: வெள்ளலூர் குடியிருப்பு பகுதிகளில் குற்றங்களை கண்காணிக்க 32 கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை போலீஸ் கமிஷனர் சுமித்சரண் துவக்கி வைத்து பார்வையிட்டார். கோவை வெள்ளலூரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு 4 மாடி கட்டிடத்தில் 80 பிளாக்குகளில் 2816 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து மாற்றப்பட்ட மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் சட்ட விரோத செயல்களான திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்தன. இதனை தடுக்கும் வகையில் போத்தனூர் காவல் நிலையம் சார்பில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியையொட்டிய பகுதிகளில் 32 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.