பெண்ணை தாக்கிய தீட்சிதரை கைது செய்யக்கோரி மனு

சிதம்பரம், நவ. 20: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண்ணை தாக்கிய தீட்சிதரை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ராஜா தலைமையில் அக்கட்சியினர் ஏராளமானோர் சிதம்பரம் சப்-கலெக்டரை சந்தித்து முறையிட வந்தனர். அவர் இல்லாததால் அலுவலர்களிடம் நடராஜர் கோயில் தீட்சிதர் தர்ஷனை கைது செய்ய கோரி மனு அளித்தனர். அந்த மனுவில், நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற லதாவை தீட்சிதர் தர்ஷன் கடுமையாக கன்னத்தில் அறைந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கோயிலில் தீட்சிதர்களின் அத்துமீறல்கள் அதிகரித்து வருகிறது. பெண்ணை தாக்கிய தீட்சிதர் தர்ஷனை பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். மேலும் நடராஜர் கோயிலை தனி சட்டம் இயற்றி அரசு கையகப்படுத்த வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர். மனு அளிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ஆட்டோ முத்து, ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ்பாபு, வாஞ்சிநாதன் உள்ளிட்ட பலர் உடன் வந்திருந்தனர்.

Related Stories: