தஞ்சை, நவ. 20: தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று நடந்தது. இதில் தேர்வு பெற்றவர்களுக்கு இன்று சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு ஏற்கனவே முடிந்தது. இதில் தஞ்சாவூர் சேர்த்து உட்பட்ட திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள 1,168 ஆண்களும், 556 பெண்களும் தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து உடற்தகுதி தேர்வு தஞ்சையில் கடந்த 6ம் தேதி துவங்கியது. ஆண்களுக்கு உடல் பரிசோதனை மற்றும் ஓட்டப்பந்தய போட்டிகள் நடந்தது. இந்த தேர்வுக்காக தஞ்சாவூர் சரகத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டனர். மேலும் உடற்தகுதி தேர்வு அனைத்தையும் போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். அதைதொடர்ந்து நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறும் போட்டிகள் நடைபெறும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி அயோத்தி தீர்ப்பையொட்டி அனைத்து போலீசாரும் அந்தந்த மாவட்டங்களுக்கு பாதுகாப்பு பணிக்கு சென்றுவிட்டனர். இதனால் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான அடுத்தகட்ட தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.