கூடலூர். நவ. 20: தென்னை மரங்களுக்கு வேர் நுண்ணூட்ட டானிக் கொடுப்பது குறித்து மதுரை வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். மதுரை வேளாண் கல்லூரி மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ், கம்பம் துணை வேளாண் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகளுக்கு தென்னையில் குரும்பை உதிர்வை தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தனர். இதையடுத்து குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தினகரன் தோட்டத்தில் உள்ள சுமார் ஆயிரம் தென்னை மரங்களுக்கு வேர் நுண்ணூட்ட டானிக் அளித்து மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நான்காம் ஆண்டு மாணவர்கள் ஜஸ்வந்த், சூர்யா, உதயகுமார், சுப்ரமணி, சந்தோஷ், சிவகுமார், வீரமணி, தாமரைக் கண்ணன் மற்றும் அஜய் செயல்முறை விளக்கம் அளித்தனர்.