தேனி, நவ. 20: வருசநாடு அருகே உள்ள மலைக்கிராம விவசாயிகள் நேற்று தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம், வருசநாடு அருகே எருமைச்சுனை, வாலாந்தாபுரம், நந்தனாபுரம் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் தங்கி விவசாயம் செய்து பிழைத்து வருகின்றனர். இக்கிராமங்களில் உள்ள விவசாயிகள் இலவம் கன்றுகளை நட்டுள்ளனர். மேலும் கொட்டை முந்திரி செடி பயிர் செய்துள்ளனர். இதில் நேற்றுமுன்தினம் மதியம், வருசநாடு வனத்துறை அதிகாரிகள் சிலர் எருமைச்சுனை, வாலாந்தாபுரம், நந்தனாபுரம் உள்ளிட்ட மலைக்கிராமங்களை சேர்ந்த வேல்முருகன், வீமன், வெள்ளையன், பெரியசாமி, மகாலிங்கம் ஆகியோர் சுமார் 15 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த 2 வருட இலவம் மரக்கன்றுகளை அடியோடு வெட்டி சாய்த்து விட்டனர்.