திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை ₹1 கோடி

திருவண்ணாமலை, நவ.20: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கையாக ₹1 கோடியே 10 லட்சம் கிடைத்தது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு மாத பவுர்ணமி நாளன்று, பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கிரிவலம் வருகின்றனர். கிரிவலம் வரும் பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணி ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி முடிந்த பின்னர் நடக்கும்.

அதன்படி, ஜப்பசி மாதத்திற்கான பவுர்ணமி கடந்த 11ம் தேதி மாலை தொடங்கி 12ம் தேதி இரவு நிறைவடைந்தது. பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தனர். பவுர்ணமி நிறைவடைந்ததையடுத்து உண்டியல் காணிக்கை எண்ணும்பணி நேற்று அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடந்தது. இதில் உண்டியல் காணிக்கையாக ₹1,10,26,315ம், 243 கிராம் தங்கம், 706 கிராம் வெள்ளி கிடைத்தது.

Related Stories: