வேலூர், நவ.20:வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் 2ம் நிலை பெண் காவலர்களுக்கான தகுதி தேர்வில் 700 பேர் பங்கேற்றனர். இதனை ஐஜி, டிஐஜி, எஸ்பி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடந்த 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வில் 46 ஆயிரத்து 700 பேர் தேர்ச்சி பெற்றனர். வேலூர் மாவட்டத்தில் 3,688 பேர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,334 பேர் என மொத்தம் 5,022 பேர் தேர்ச்சி பெற்றனர். முதற்கட்டமாக 2ம் நிலை ஆண் காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.இந்நிலையில் தொடர்ச்சியாக 2ம் நிலை பெண் காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை 6 மணியளவில் தொடங்கியது. உடற்தகுதி தேர்வில் பங்கேற்க வந்த பெண்கள் அதிகாலை 5.30 மணியளவில் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அசல் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடந்தது.