கந்தர்வகோட்டை, நவ.19: கந்தர்வகோட்டையிலிருந்து தஞ்சை நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சை காவல்நிலையத்தில் நிறுத்தியதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மாணவ, மாணவிகள் மற்றும் பயணிகள் ஒரு மணிநேரம் தவித்தனர். தஞ்சையிலிருந்து கந்தர்வகோட்டை நோக்கி நேற்று அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது. வரும்போதே துருசுபட்டி வழியாக பஸ் வந்துள்ளது. அப்போது சாலையில் விளைவித்த விளைபொருட்களை உலர வைத்துள்ளனர். இதனால் பஸ்சை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவ்வழியாக மீண்டும் இயக்க முடியாது என பஸ்சை கந்தர்வகோட்டை காவல்நிலையத்தில் நிறுத்திவிட்டு ஓட்டுனர் பன்னீர்செல்வமும், நடத்துனர் அந்தோணிராஜும் எஸ்ஐ சுந்தரமூர்த்தியிடம் புகார் செய்தனர். உடனடியாக எஸ்ஐ சுந்தரமூர்த்தி சம்வப இடத்திற்கு சென்று சாலையில் விளைப்பொருட்களை உலர வைத்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பஸ் போக்குவரத்தை தடையின்றி செல்ல வழிச்செய்தனர்.