மதுரையில் வைகை வெள்ளத்தில் இழுத்து சென்ற சிறுவன் உடல் மீட்பு தம்பியை காப்பாற்ற முயன்று பலியான பரிதாபம்

மதுரை, நவ. 19: மதுரை வைகையாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட சிறுவனின்  உடல் மீட்கப்பட்டது. தம்பியை காப்பாற்ற சென்று அண்ணன் பலியான பரிதாப தகவல் வெளிவந்துள்ளது. மதுரை பெத்தானியபுரத்தை சேர்ந்த குமார் மகன் பாலமுருகன் (11). இவர், தனது தம்பி, நண்பர்களுடன் பெத்தானியபுரம் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் நேற்று முன்தினம் குளிக்க சென்றார். சிறிதுநேரத்தில் வைகையாற்று  வெள்ளம் பாலமுருகனின் தம்பியை இழுத்து சென்றது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து நீருக்குள் பாய்ந்து, தனது தம்பியை காப்பாற்றி இழுத்து வெளியில் விட்டார். ஆனால், வெள்ளம் சிறுவன் பாலமுருகனை இழுத்து சென்றது. இதைக் கண்ட அப்பகுதியினர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரை திடீர் நகர், தல்லாகுளம் தீயணைப்புத்துறை வீரர்கள் விடிய, விடிய தேடி வந்தனர். ஆனால் பாலமுருகன் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று காலை ஆரப்பாளையம் வைகையற்று பாலத்துக்கு அடியில் ஒரு சிறுவன் உடல் சிக்கி கிடப்பதை அப்பகுதியினர் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கரிமேடு போலீசார் வந்து விசாரித்ததில் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட பாலமுருகன் என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: