நாங்குநேரி, நவ. 8: நாங்குநேரி சன்னதி தெருவை சேர்ந்தவர் விவசாயி ராமர் (40). இவர், மாடுகளும் வளர்த்து வருகிறார் நேற்று காலை தனது மாடுகளை அருகில் உள்ள வயல்வெளிக்கு மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார் அப்போது சிவன் கோயில் அருகில் உள்ள மின்மாற்றியில் உயரழுத்த மின்வயர் அறுந்து விழுந்து கிடந்துள்ளது. அதில் உரசிய எருமை மாடு மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானது. அப்போது பின்னால் வந்த ராமர், கீழே விழுந்து கிடந்த மாட்டை எழுப்ப முயன்றார். அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். நாங்குநேரி சிவன் கோயில் மற்றும் அருகிலுள்ள தெப்பக்குளத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். அதிர்ஷ்டவசமாக நேற்று யாரும் அங்கு வராததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.