போடி, நவ.8: மத்திய பாஜக அரசைக் கண்டித்து போடி வள்ளுவர் சிலை திடலில் தேனி மாவட்ட காங்கிரஸ் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சன்னாசி, மாவட்ட பொருளாளர் பாலசுப்பரமணியன் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் முசாக் மந்திரி வரவேற்றார். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் பேசுகையில், தேர்தல் வந்து விட்டால் பொய் மூட்டைகளை மோடி அவிழ்த்து விடுவார். தேனி மக்களவை தேர்தலில் அதிமுக மலிவான, மோசமான அணுகுமுறையால் வெற்றி பெற்றுள்ளது. ஜிஎஸ்டி வரியால் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. பணம் இழப்பு நடவடிக்கையால் மக்கள் செயலிழந்து நிற்கின்றனர். ஆனால், மக்களைப் பற்றி கவலைப்படாமல் பிரதமர் மோடி உலகத்தை சுற்றி வருகிறார் என்று கூறினார்.