சிவகங்கை, நவ. 7: சிவகங்கை மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடத்தினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடும நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 18வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதி செய்திடவும், குழந்தை திருமணத்தை முற்றிலுமாக சிவகங்கை மாவட்டத்தில் தடுக்கும் வகையில் குழந்தை திருமணம் நடத்துபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 18வயது நிறைவடையாத பெண் குழந்தைக்கும், 21வயது நிறைவடையாத ஆணுக்கும் நடைபெறும் திருமணம் குழந்தை திருமணம் ஆகும். குழந்தை திருமணம் செய்ய ஏற்பாடு செய்பவர்கள் அதற்கு உடந்தையாக இருப்பவர்கள், குழந்தை திருமணம் என தெரிந்தும் நடத்துவற்கு அனுமதி வழங்கக்கூடிய திருமண மஹால் உரிமையாளர்கள், பத்திரிக்கை அச்சடித்து தந்த அச்சக உரிமையாளர், குழந்தை திருமணத்தில் கலந்துகொண்டவர்கள், முறையாக விசாரிக்காமல் சான்று வழங்கும் அரசு அலுவலர்கள் ஆகியோர் மீதும் குழந்தை திருமணம் தடைச்சட்டம் 2006 மற்றும் பாலியல் குற்ற குழந்தைகளை பாதுகாப்பு சட்டம்-2012ன் படியும் பிணையில் வர முடியாத வழக்கு பதிவு செய்யப்படும்.