கடலூர், நவ. 7:கடலூர் கோட்ட தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசின் பிரதம மந்திரியின் அவாஸ் யோஜானா “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் மூலமாக தமிழ்நாட்டில் நகர்புறங்களில் வசிக்கும் வீடில்லா ஏழை மக்கள் தங்களது சொந்த இடத்தில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத்துடன் (ரூ.2.10 லட்சம்) பயனாளியின் பங்களிப்புடன் கூடிய வீடு கட்டிகொள்ளும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேற்படி திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் 1983 பயனாளிகள் மானியம் பெற்று வீடு கட்டி வருகின்றனர். அதில் 825 பயனாளிகள் தங்களது புதிதாக கட்டிய வீட்டில் குடியேறி பயனடைந்துள்ளனர். தற்போது கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பேரூராட்சி பகுதிகளில், இத்திட்டத்தை பேரூராட்சி மூலம் செயல்படுத்தியதில் விட்டுப்போன அல்லது பயன்பெறாத பயனாளிகள் தங்களது சொந்த மனையில் புதிதாக வீடு கட்டிக்கொள்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் பயனாளிகள் தேர்வு வரும் 8, 11 மற்றும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை செய்வதற்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்ததிட்டத்தில் சேர பயனாளிகள் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட சொந்த இடத்தில் குடிசை அல்லது ஓட்டு வீட்டில் வசித்து வருபவராக இருக்க வேண்டும்.