கடலூர், நவ. 7: கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் மளிகை, அரிசி கடை என அடுத்தடுத்த கடைகளின் பூட்டை உடைத்து பணம் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் வண்டிப்பாளையம் சூரசம்ஹார தெரு பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ்(34). அதே பகுதியில் மளிகை மற்றும் காய்கறி கடை தனித்தனியாக வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடை வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை கடைகளுக்கு அருகில் வீட்டில் இருந்தவர்கள் பார்த்தபோது கடையின் பூட்டு மட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த நிலையில், இது குறித்து பாக்யராஜுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே பாக்யராஜ் கடைக்கு வந்து பார்த்தபோது, மளிகை கடை, அதை தொடர்ந்து காய்கறி கடை என நான்கு பூட்டுக்களை உடைத்து கடையில் புகுந்து பணம் மற்றும் ஆவணங்கள் வைத்திருந்த பை உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது.