திருவாரூர், நவ.7: திருவாரூர் மாவட்டத்தில் கால்நடைகளை உரிய முறையில் பராமரிக்காமல் சாலைகளில் சுற்றி திரியவிடும் உரிமையாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என எஸ்.பி துரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.மாவட்டத் தலைநகரான திருவாரூர் நகரினை நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் வரையில் பயன்படுத்திவரும் நிலையில் சாலைகளில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. இந்நிலையில் நகரில் தற்போது பெய்து வரும் மழையினையொட்டி வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள், குதிரைகள் உட்பட அனைத்து கால்நடைகளும் தெருக்களில் சுற்றித் திரிவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்பட்டு வரும் நிலையில் திருவாரூர் பஜன மட தெருவை சேர்ந்த டூவீலர் மெக்கானிக் சுந்தர் (32) என்பவர் கடந்த மாதம் 27ம் தேதி திருவாரூர் புதுத்தெருவில் குறுக்கே பசு மாடு ஒன்று வந்து விடவே எதிர்பாராத விதமாக அதன் மீது பைக் மோதியதில் இறந்தார்.