இடிந்து விழும் அபாயத்தில் ஊராட்சி அலுவலக கட்டிடம்

நெய்வேலி, நவ. 6: நெய்வேலி அருகே உள்ளது வடக்கு சேப்ளாநத்தம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ஊராட்சி மன்ற அலுவலகம் சேப்ளாநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளி கட்டிடம் அருகில் கட்டப்பட்டது. இந்த கிராமத்தில் சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்  இங்குள்ள மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவரை சந்தித்து இப்பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான வரிவசூல் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கு மேற்கொண்ட அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். தற்போது இந்த ஊராட்சி மன்ற கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு வலுவிழந்து காணப்படுகிறது. மேலும் கட்டிடம் ஆபத்தான நிலையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் இந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வரும்  பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்வதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த சில மாதங்களாக ஊராட்சி மன்ற அலுவலகம் பூட்டியே கிடக்கின்றது. இதனால் கிராம மக்கள் ஊராட்சி செயலாளரை தேடி அவரது இல்லத்துக்கு செல்லும் நிலை உள்ளது. மேலும் அருகில் குடியிருக்கும் மக்கள் தங்கள் கால்நடைகளை இந்த கட்டிடத்தில் கட்டி வைத்துள்ளனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி ஊராட்சி கட்டிடத்தை மாவட்ட நிர்வாகமும், குறிஞ்சிப்பாடி கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் இடித்துவிட்டு புதியதாக  அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Related Stories: