திருவாரூர், நவ. 6: திருவாரூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது நெற்பயிர்களை உடனடியாக காப்பீடு செய்து கொள்ளுமாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் இழப்புகளை ஈடு செய்யும் வகையில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை காப்பீடு செய்துகொள்வதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.