திருப்புத்தூர், நவ.5: திருப்புத்தூர் அருகே பையூர் கிராமத்தில் ஆடுகளை ஏலம் விடுவதில் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. திருப்புத்தூர் அருகே கண்வராயன்பட்டி ஊராட்சியில் பையூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் ஸ்ரீ கருமலைச்சாத்த அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான ஆடுகளை விற்று பணம் பிரிப்பதில் இரு தரப்பினருக்கிடையே பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து இரு தரப்பினரும் தேவகோட்டை கோட்டாட்சியர் நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்கள் தரப்பு கருத்துக்களை முன்வைத்தனர். இதனையடுத்து கோட்டாட்சியர் சங்கரநாராயணன், ‘‘இரு தரப்பினரும் சேர்ந்து, கருமலைச்சாத்த அய்யனார் கோயிலுக்கு சொந்தமான வெள்ளாடுகளை விற்பனை செய்து அதில் வரும் பணத்தில், ஆடு மேய்த்தற்கான கூலி நிலுவையை வழங்க வேண்டும். பின்னர் மீதமுள்ள மொத்த பணத்தையும், கோயிலுக்கு சொந்தமான வேறு ஏதும் பணம் மற்றும் நகைகள் இருந்தால் அதையும் ‘ஏ’ மற்றும் ‘பி’ பார்ட்டி பெயரில் இணை வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். இரு தரப்பினர்கள் சம்மதத்தின் பேரில் மேற்படி தொகையை பொது நிகழ்விற்காக பயன்படுத்தி கொள்ளலாம்’’ என உத்தரவிட்டார்.