சிவகங்கை, நவ.5: குறு, சிறு தொழில் நிறுவனங்கள் தரச்சான்று பெற கட்டணம் மானியமாக வழங்கப்பட உள்ளது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் சர்வதேச போட்டித்தன்மையினை மேம்படுத்தவும், உலகளாவிய சந்தையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு ஏதுவாக இந்நிறுவனங்கள் ஐஎஸ்ஓ உள்ளிட்ட சர்வதேச தரச்சான்றிதழ்கள் பெற செலுத்தும் கட்டணத்தில் ஒவ்வொரு சான்றிதழுக்கும் அதிகபட்சமாக ரூ.ஒரு லட்சம் வரை ஈடு செய்யும் திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சர்வதேச தரச்சான்றிதழ்கள் பெறுவதற்கு செலுத்தும் கட்டணத்தில் 100 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியமாக அளிக்கப்படும். இந்நிதியாண்டில்(2019-2020) திட்டத்தினை செயல்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.