கோவை, நவ. 5: கோவை அரசு மருத்துவமனையில் தீக்காயம் மற்றும் விபத்து, அவசர சிகிச்சை பிரிவுக்கான ஒருங்கிணைந்த வளாகம் கட்ட அனுமதி கிடைக்காததால் தாமதம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் 12வது ஐந்தாண்டு திட்டத்தில் தீக்காயங்களினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க, தேசிய தீக்காய தடுப்பு மற்றும் மேலாண்மை என்ற திட்டத்தை துவங்கியது. இதனை மத்திய அரசின் சுகாதார பணிகள் தலைமை அலுவலகம் கண்காணிக்கிறது. இத்திட்டத்தின் கீழ், பல்வேறு அரசு மருத்துவமனைகளின் சிறப்பு தீக்காய சிகிச்சை துறை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. இதில், தமிழகத்தில் கோவை, வேலுார், சேலம் ஆகிய மூன்று அரசு மருத்துவ கல்லுாரிகளில் சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவை துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவையும் அதே கட்டிடத்தில் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கான வரைபடம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்தது.