பணத்தை திருப்பி கேட்ட தம்பதிக்கு கத்திக்குத்து

சோமனூர்,  நவ. 5:  சோமனூர் அருகே கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கணவன்-மனைவியை  கத்தியால் குத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். சோமனூரை  அடுத்த கருமத்தம்பட்டி நால் ரோட்டில் பூக்கடை நடத்தி வருபவர் சந்திரா(45).  இவரது கடை அருகே மீன் வியாபாரம் செய்து வரும் முத்துமாரியப்பன்(45) என்பவர்  கடந்த சில தினங்ககளுக்கு முன்பு ரூ. 5 ஆயிரம் கொடுத்து பூ வாங்கி தரும்படி  சந்திராவிடம் கூறியுள்ளார். ஆனால் சந்திரா பணத்தை பெற்றுக் கொண்டு பூ  வாங்கிதரவில்லை. இதனால் முத்துமாரியப்பன் கொடுத்த பணத்தை திருப்பி  கேட்டுள்ளார். ஆனால் சந்திரா கடந்த ஒருமாதமாக பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி  வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்துமாரியப்பன் மற்றும்  அவரது மனைவி பாண்டியம்மாள் ஆகியோர் சந்திராவின் கடைக்கு சென்று பணத்தை  திருப்பி தரும் படி கேட்டுள்ளனர். இதனால் சந்திராவிற்கும்  முத்துமாரியப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது சந்திராவின்  நண்பர் சோமனூர் காமாட்சி அம்மன் கோயில் வீதியை சேர்ந்த ராஜா(51)  முத்துமாரியப்பனை தாக்கியுள்ளார். பின் முத்துமாரியப்பன் மற்றும் அவரது  மனைவி பாண்டியம்மாளை சந்திரா மற்றும் ராஜா ஆகியோர் கத்தரிக்கோலால்  குத்தினர். இதில் பாண்டியம்மாளுக்கு கையில் பலத்த காயமும்  முத்துமாரியப்பனுக்கு லேசான காயமும் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் பாண்டியம்மாளை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பிைவத்தனர். இச்சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு  பதிவு செய்து சந்திரா மற்றும் அவரது நண்பர் ராஜாவை கைது செய்தனர்.

Related Stories: