சீர்காழி, நவ.5: வைத்தீஸ்வரன்கோயில் பஸ்நிலையத்தில் பூட்டிக்கிடக்கும் கழிப்பறையை பயணிகள் நலன்கருதி திறக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் பேருந்து நிலையத்தில் பயணிகள் நலன் கருதி கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. ஆனால் பேரூராட்சி நிர்வாகம் கழிப்பறை கட்டிடத்தை சரிவர பராமரிக்காததால் கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக பூட்டி கிடக்கிறது. இதனால் பல்வேறு பகுதியிலிருந்து பஸ்ஸில் வரும் பயணிகள் பேருந்து நிலையத்திற்கு வந்து இறங்கும்போது கழிப்பறை கட்டிடம் பூட்டி கிடப்பதால் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.கழிப்பறை கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென பயணிகள் பொதுமக்கள் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தும் பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் நலன் கருதி கழிப்பறை கட்டிடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.