ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவனின் உடல் கரை ஒதுங்கியது

திருக்காட்டுப்பள்ளி, நவ. 1: திருக்காட்டுப்பள்ளி அருகே குடமுருட்டி ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவனின் உடல் நேற்று கரை ஒதுங்கியது.

திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டி மிஷின் தெருவை சேர்ந்தவர் எட்வர்ட் (50). பவனமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்க்கிறார். இவரது மகன் ரெவின்ஹெஸ்லி (14). மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பில் படித்து வந்தார்.

கடந்த 28ம் தேதி காலை ரெவின்ஹெஸ்லி அதே தெருவை சேர்ந்த நண்பரான தாஜூதீன் மகன் வசீருடன் குடமுருட்டி ஆற்றில் மீன் பிடிக்க சென்றார்.

இருவரும் ஆற்றில் நீந்தி வரும்போது எதிர்பாராதவிதமாக ஆற்று நீரில் மூழ்கி ரெவின்ஹெஸ்லி மூழ்கி மாயமானார். இதையடுத்து கடந்த 3 நாட்களாக மாணவனின் உடலை திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் குடமுருட்டி ஆற்றின் வடக்கு கரையில் வளப்பக்குடி முனியாண்டவர் கோயில் அருகில் ரெவின்ஹெஸ்லியின் உடல் கரையில் ஒதுங்கியது.

அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Related Stories: