திருவாரூர், நவ.1: திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகமானது இரவு நேரங்களில் மது கூடமாக செயல்படுவதால் அதனை தடுக்க வேண்டும் என நோயாளிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் கலெக்டர் அலுவலக பின்புறத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு வெளி நோயாளிகளாக தினந்தோறும் 1200க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்லும் நிலையில், உள்நோயாளிகளாக திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் தற்போது மழைக்காலம் என்பதால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு எதிரே இருந்து வரும் வாகன நிறுத்துமிடம் உட்பட பல்வேறு இடங்களில் காலி மதுபாட்டில்கள் அதிக அளவில் கிடக்கிறது. இரவு நேரங்களில் குடிமகன்கள் இந்த மருத்துவமனை வளாகத்தை மது கூடமாக பயன்படுத்தி வருகின்றனர்.எனவே இதனை தடுப்பதற்கு மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், நோயாளிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.