புதுக்கோட்டை, நவ.1: குளம், ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கருவேல மரங்கள் மாநிலம் முழுவதும் பரவலாக உள்ளன. எந்த வறட்சியிலும் செழித்து வளர்ந்து விடும் இவை வேலிக்கருவை, கருவேலா, என்று பல வகைகளாக உள்ளன. வேலிக்கருவையால் பல சிரமங்கள்தான் ஏற்பட்டிருக்கின்றன. வேலிக்கருவை மரங் களை அழிக்க முடியாது என்றும், அவை வெட்ட வெட்ட வளர்ந்து விடுவதாகவும் கூறுகின்றனர். ஆனால், அது உண்மை அல்ல. ஒரு காலத்தில் திருநெல்வேலி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் மக்களின் எரிபொருளுக்காகவும் விறகு வியாபாரம் செய்து பிழைக்கும் விதமாகவும் ஹெலிகாப்டரில் வேலிக்கருவை விதைகள் தூவப்பட்டன. பின்னர் அவை நாடெங்கும் பரவி விட்டன. ஆனால், தற்போது விறகுத் தேவையை அறிவியல் தொழில்நுட்பங்கள் மாற்றி விட்டன. எனவே, வேலிக்கருவை மரங்களை வளர்த்துதான் விறகுத் தேவையைப் பூர்த்தி செய்தாக வேண்டும் என்பதில்லை. அதே நிலத்தில் மற்ற மரங்களை நட்டு வளர்க்கலாம். வேலிக்கருவை மரங்களை அழிக்க வேண்டும் என்று நினைத்தால் ஒரே மாதத்தில் அழித்துவிட முடியும். கேரளத்தில் விவசாய நிலங்களில் வேலிக்கருவை இல்லை. தப்பித்தவறி முளைத்தாலும் அழித்து விடுகிறார்கள்.