செங்கம், நவ.1: செங்கம், புதுப்பாளையம் ஒன்றியங்களில் தனிநபர் கழிப்பிடம் அமைத்து பயன்படுத்துவதன் அவசியம் குறித்து கிராம மக்கள் இடையே போதிய விழிப்புணர்வு இல்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
செங்கம், புதுப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் தனிநபர் கழிப்பிடம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. மேலும், ₹12 ஆயிரம் மானியத்தில் தனிநபர் கழிப்பிடம் கட்ட அதிகாரிகள் வீடுவீடாக சென்று ஆய்வு செய்து, அதற்கான தொகையை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தினர். தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள், தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் சார்பில் வீடுகளில் தனிநபர் கழிப்பிடம் கட்டி பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், பெரும்பாலானோர் வீடுகளில் தனிநபர் கழிப்பிடத்தை கட்டி முடிக்கவில்லை. இதுதவிர, ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்களும் பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது.