அரவக்குறிச்சி, அக்.31: அரவக்குறிச்சியின் மேற்கே சின்னதாராபுரம் ரோட்டில் பஸ் நிலையம் உள்ளது. கரூர் திண்டுக்கல் செல்லும் பெரும்பாலான பேருந்துகள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்வதில்லை.கடைவீதி பஸ் நிறுத்தத்திலேயே பயணிகளை இறக்கி ஏற்றிச் செல்கின்றன. இதனால்அப்பகுதியில் குறிப்பாக பள்ளி விடும் நேரங்களில் போக்குவரத்து தடைபட்டு அடிக்கடி விபத்து நேருகிறது.அரவக்குறிச்சியின் மேற்கே தான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,பேரூராட்சி அலுவலகம், கல்வி அலுவலகம், காவல்நிலையம், வங்கிகள் போன்ற முக்கிய அலுவலகங்கள் உள்ளன. பேரூந்து நிலையத்தின் மேற்குப் பகுதியில் தான் பொன்நகர், ஹபீப்நகர், ஐயாவுநகர், கேர்நகர் போன்ற பகுதிகளில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளில் வசித்து வரும் மக்கள் தங்கள் பகுதிக்கும், அப்பகுதியில் அமைந்துள்ள முக்கிய அலுவலகங்களுக்கும் செல்ல வேண்டியவர்களும் கடைவீதி பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஒன்றரை கிமீ சிரமப்பட்டு நடக்க வேண்டியுள்ளது. அதே போல அரவக்குறிச்சியின் மேற்கு பகுதியில் வசிப்பவர்கள் ஒன்றரை கிமீ நடந்து தான் கரூர் திண்டுக்கல் பஸ் ஏற வேண்டும். இதில் முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், சூட்கேஸ் போன்ற சுமைகளுடன் செல்பவர்கள் உள்ளிட்டவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகும் அவல நிலையுள்ளது.