விருதுநகர், அக். 27 : இன்று தீபாவளி கொண்டாடப்படுவதையொட்டி, நேற்று இரவு முழுவதும் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகையை கொண்டாட கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள் தயாராகி வந்தனர். ஜவுளி கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. அடித்தட்டு மக்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்திற்கு தீபாவளிப் பண்டிகை முன்பணம், போனஸ் மற்றும் வாரச் சம்பளம் அனைத்தும் வெள்ளி, சனிக்கிழமைகளில் வழங்கப்பட்டதால் நேற்று கடை வீதிகளிலும், பிளாட்பார ஜவுளி கடைகளில் கூட்டம் அதிகம் இருந்தது. விடிந்தால் தீபாவளி என்பதால், நேற்று அதிகாலை முதல் இன்று காலை வரை விடிய, விடிய கடைவிதிகளில் மக்கள் வெள்ளம் போல் குவிந்திருந்தனர். கடைவீதிகளில் ரெடிமேட் ஆடைகள், பலசரக்கு, பேன்சி கடைகள், இனிப்பு கடைகள், பூக்கடைகள், பழ கடைகள், பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. விருதுநகர் தேசபந்து மைதானம் மற்றும் மதுரை சாலை ஓரங்களில் திருப்பூர், ஈரோடு ஜவுளி கடைகள் அதிக அளவில் போடப்பட்டு இருந்தன. பிளாட்பாரக் கடைகள், பூக்கடைகள், ஸ்வீட் கடைகள், ரெடிமேட் கடைகள், பழங்கள், பேன்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.