சோமனூர், அக். 27: சோமனூர் அருகே உள்ள கிட்டாம்பாளையத்தில் பறவைகளுக்காக பட்டாசு வெடிப்பதை கிராம மக்கள் தவிர்த்து வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோமனூர் அருகே உள்ள கிட்டாம்பாளையம் கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள ஐந்து ஆலமரங்களில் ஐந்தாயிரம் பறவைகள் பல ஆண்டுகளாக தங்கி வருகின்றன. இதில் பகல் நேரங்களில் இரண்டாயிரம் வவ்வால்களும், இரவு நேரங்களில் சுமார் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளும் உள்ளன. பல ஆண்டுகளாக இந்த பறவைகள் அந்த மரங்களில் இருந்து வருவதால் அப்பகுதி மக்கள் தீபாவளி நாளன்று பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகின்றனர். மேலும் அந்த பறவைகளை யாரேனும் தொந்தரவு செய்யவும் அப்பகுதி மக்கள் விடுவதில்லை. குறிப்பாக பள்ளி சிறுவர், சிறுமியர் பறவைகளுக்காக பட்டாசு வெடிப்பதை முழுமையாக தவிர்த்து விட்டு இனிப்பு வழங்கி மகிழ்கின்றனர்.