ஈரோடு, அக். 27: தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் ஈரோட்டில் ஜவுளி கடைகள், பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியதால் ஈரோடு நேற்று ஸ்தம்பித்தது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. ஜவுளி மாநகரமான ஈரோட்டில் கடந்த இரண்டு வாரமாக திருவேங்கடசாமி வீதி, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்கேவி., ரோடு உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. விசைத்தறி கூடங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டதையடுத்து நேற்று கடைவீதிகளில் ஜவுளிகள், பட்டாசுகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. ஜவுளி கடைகள் நிறைந்த பகுதிகளான மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா பகுதிக்கு மக்கள் அதிகளவில் வந்து ஜவுளி வாங்கி சென்றனர்.