மதுரை, அக். 25: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மதுரையில் அரசு மருத்துவமனைக்கு மர்ம காய்ச்சலுக்காக தினமும் ஏராளமானோர் சிகிச்சை பெற வந்த வண்ணம் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 95 பேர் சிகிச்சைக்கு வந்தனர். டெங்கு பாதிப்பு ஏற்பட்டு 3 பெண்கள் உள்பட 16 பேர் இந்த மருத்துவமனையில் தனிப்பிரிவு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேற்று மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் தளபதி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, திமுக மருத்துவரணி மாநில துணைத்தலைவர் டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ. பகுதி செயலாளர்கள் அக்ரிகணேசன், கிருஷ்ணபாண்டி ஆகியோர் பார்வையிட்டனர். டெங்கு பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுவது குறித்து மருத்துவமனை டீன் வனிதா விளக்கி கூறினார்.