நாகை, அக்.25: நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை பணிகளை கலெக்டர் பிரவீன் பி நாயர் தொடங்கி வைத்தார். மாவட்ட நிர்வாகம் சார்பில் வட கிழக்குப் பருவமழை காலங்களில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் சுகாதாரம் தொடர்பான தூய்மை பணிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பொதுமக்களிடையே சுற்றுப்புற சுகாதாரம், கொசு உற்பத்தியினை தடுத்தல் மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள், 434 ஊராட்சிகளிலும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் நேற்று தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் அனைத்து அரசு அலுவலக வளாகங்களும் சுத்தம் மற்றும் சுகாதாரமாக பராமாரிக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கும் தங்கள் வீடுகள், குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் தெருவோரங்களில் குப்பைகள் தேங்காமலும், தண்ணீர் தேங்காமலும் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த இயலும்.