மயிலாடுதுறை, அக்.25:மயிலாடுதுறை அருகே மளிகை கடையில் கொள்ளையில் ஈடுபட்ட ஆசாமிகள் பொருட்களுக்கு தீவைத்ததால் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஆட்டோ கங்காபுரம் மேலத்தெருவில் மளிகைக் கடை நடத்தி வருபவர் மைக்கேல் அந்தோணி மகன் கிறிஸ்டோபர் (30). தீபாவளியை முன்னிட்டு கடையில் மளிகை பொருட்களை வாங்கி குவித்து வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் 10.30மணிக்கு கடையை பூட்டி விட்டு அருகிலுள்ள வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் அதிகாலை 3 மணியளவில் அவ்வழியாக சென்ற பால்காரர் கடை தீப்பற்றி எரிகிறது என்று சத்தம் போட்டுள்ளார். உடனே கிறிஸ்டோபர் மற்றும் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அணைத்தனர். இருப்பினும் கடையில் இருந்த ஒட்டுமொத்த பொருட்களும் எரிந்தும் உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு நாசமாகி விட்டது.