வாலாஜாபாத், அக்.24: வாலாஜாபாத் அருகே நாயக்கன்பேட்டை, ஏகனாம்பேட்டை ஆகிய பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள், வாகனங்களின் நெரிசலால், சாலையை கடக்க முடியாமல் கடும் சிரமம் அடைகின்றனர். அந்த பகுதியில் போலீசாரை நியமித்து, போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் வரை செல்லும் சாலையை ஒட்டி, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில், நாயக்கன்பேட்டை, ஏகனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் 2 மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. பள்ளிகளில், 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளிகளுக்கு பெரும்பாலான மாணவ, மாணவிகள் சைக்கிளிலும், நடந்தும் செல்கின்றனர். வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் பிரதான சாலை என்பதால், சாலையை கடக்க மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதுபோல் சாலையை கடக்கும்போது, வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக செல்வதால் மாணவர்கள் மீது வாகனங்கள் மோதி விடுமே என்ற அச்சமடைகின்றனர்.