கோவை, அக்.23: மூளைச்சாவு அடைந்த 38 வயது பெண் கூலித்தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. இதன் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெறுகிறார்கள். இது குறித்து கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் நல்லா ஜி பழனிச்சாமி கூறுகையில்,நாமக்கல் மாவட்டம், பாதரை பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மனைவி தங்கமணி (38). கடந்த 15ம் தேதி வேலையை முடித்து விட்டு வீடு திரும்பும்போது பைக் மோதி படுகாயமடைந்துள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்த பின்னர் அவரை கோவை, கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும் கடந்த 21ம் தேதி தங்கமணிக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரின் கணவர் பழனிச்சாமி மனைவியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார்.