திருவாரூர், அக்.23: திருவாரூரில் இருந்து வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகமானது டெங்கு கொசு உற்பத்தி செய்யும் அலுவலகமாக இருந்து வருவது மட்டுமின்றி மது கூடமாகவும் இருந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய, பகுதிகளில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் இந்த டெங்கு கொசு உற்பத்தி செய்யும் இடங்கள் கண்டறியப்பட்டு அவற்றை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இதுபோன்று வீட்டையும் சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ளாமல் டெங்கு கொசு பரவும் வகையில் பொருட்களை வைத்திருக்கும் வீட்டின் உரிமையாளர்கள், பொதுமக்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் என அனைவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் விதிக்கும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இதுவரையில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராத தொகையாக ரூ 3 லட்சம் வரையில் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக திருவாரூர் நகராட்சி சார்பில் தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு ரூ. ஒரு லட்சம் அபராதமாக கடந்த 2 தினங்களுக்கு முன்னர் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.