குலசேகரம், அக். 23: மனோதங்கராஜ் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த தேர்தல் நேரத்தில் மதுக்கடைகளை படிப்படியாக மூடி, மதுவில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என கூறிய அதிமுக அரசு இன்று மது விற்பனைக்காக 385 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்திருப்பது தமிழக மக்களை முட்டாளாக்கும் செயல். மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதற்கு இலக்கு நிர்ணயித்திருக்க வேண்டிய அரசு, மதுவை அதிகமாக விற்பனை செய்வது எப்படி என்று திட்டம் போட்டு கொண்டிருக்கிறது. பொது மக்களே அனைவரும் சென்று குடியுங்கள், குடித்து சீரழியங்கள், உங்கள் குடும்பங்களும் சீரழியட்டும் என்ற நோக்கத்திலேயே மது விற்பனைக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நிலவும் வேலை வாய்ப்பு பிரச்சனையை தீர்க்கவோ, தினசரி அரங்கேறும் திருட்டு, கொலை போன்ற அசம்பாவிதங்களை குறைக்கவோ, குமரி வட்டத்தில் சின்னாபின்னமாகிக்கிடக்கும் சாலைகளை சரிசெய்வது குறித்தோ, பாழடைந்த பேருந்துகளை மாற்றி நல்ல பேருந்துகளை இயக்குவது குறித்தோ எந்த இலக்கும் நிர்ணயிக்க இயலாத அரசு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்திருப்பது இந்திய அரங்கில் தமிழர்களை குடிகாரர்களாய் சித்தரிக்கும் செயல். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.