கும்பகோணம், அக். 17: தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் சூழ் பருவத்தில் உள்ள குறுவை பயிர்கள் பதராகும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 1 லட்சம் ஏக்கரில் மின் மோட்டார் உதவியுடன் குறுவை சாகுபடியை விவசாயிகள் செய்துள்ளனர். குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூலை மாதம் விதை விதைத்து 30 நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் மாதம் நாற்றை பறித்து வயல்களில் நடுவர். பின்னர் அதிலிருந்து 130 நாட்களுக்கு பிறகு அக்டோபர் மாதம் அறுவடை செய்வர்.குறுவை சாகுபடிக்கு ஒரு காலத்தில் ஆற்றின் தண்ணீரை கொண்டு நடவு செய்து அறுவடை செய்யப்பட்டது. தற்போது ஆறுகளில் தண்ணீர் வந்தும் வாய்க்கால்களில் வராததால் ஆழ்குழாய் மின்மோட்டாரை கொண்டு சாகுபடி பணிகள் நடக்கிறது.தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மின்மோட்டார் தண்ணீரை கொண்டு குறுவை நடவு செய்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் குறுவை சாகுபடி பயிர்கள் சாய்ந்துள்ளது. இதனால் பால் பருவம் எனும் சூழ் பருவத்தில் உள்ள நெற்பயிர்கள் பதராகும் நிலை உள்ளது. தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் நெற்பயிர்கள் பாரம் தாங்காமல் சாய்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் நெற்பயிர்கள் முளைப்பதற்கு வாய்ப்புள்ளது.