விழுப்புரம், அக். 17: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வன்முறையை தூண்டும்வகையில் பேசினாலோ, சமூகவலை தளங்களில் பரப்பினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். தேர்தல் விதிமுறைகளின் படி பிரசாரம் செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: வரும் 21ம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கிறது. அதற்கான தேர்தல் பிரசாரம் இன்னும் சில நாட்களில் முடிவடைகின்றன. அனைத்து கட்சிகளும் தேர்தல் விதிமுறைகளின் படி அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்திட வேண்டும். மேலும், தேசிய தலைவர்கள் மற்றும் மாநில தலைவர்களுக்கு எதிராகவும், சாதி, மத ரீதியாகவும் எவரையும், அவதூறாக பேசுவதும், அது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதும், தகவல்களை பிறருக்கு பகிர்வதும் வழிவகை செய்வதும் சட்டப்படி குற்றமாகும்.