முத்துப்பேட்டை, அக்.16: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் ஊராட்சி ஒன்றியத்தில் பெரிய ஊராட்சிகளில் ஒன்றாகும். இங்கு ஒரு பரந்த கடைத்தெரு உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான வியாபார நிறுவனங்கள் உள்ளன. அதேபோல் அரசின் முக்கிய அலுவலகங்கள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஆகியவை உள்ளது. இதன் சுற்றுப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதனால் அந்த கிராமங்களுக்கு இந்த கடைத்தெருதான் முக்கிய பகுதியாகும். அதேபோல் எடையூர் சிவன் கோயில் அருகே தொலைபேசி நிலையம் டவருடன் உள்ளது. இதன் மூலம் ஏராளமானோர் தொலைபேசி இணைப்புகள் பெற்றுள்ளனர். அதேபோல் இந்த பகுதியில் இதற்கு ஏராளமான வாடிக்கையாளர்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்தாண்டு இப்பகுதியை தாக்கிய கஜா புயலின் கோரதாண்டவம் இந்த தொலைபேசி நிலையத்தையும் விட்டு வைக்காமல் சேதப்படுத்தியது. மேலும் இதன் டவரும் சேதமானது. இதனால் இந்த தொலைபேசி நிலையத்திலிருந்து சிக்னல் பெற்று இயங்கி வந்த தொலைபேசிகள், செல்போன்கள் துண்டிக்கப்பட்டது. ஆனால் கஜா புயல் ஏற்பட்டு கடந்த 11மாதங்களை கடந்தும் இன்னும் சீரமைக்காததால் இந்த தொலைபேசி நிலையம் செயலற்று கிடக்கிறது.