கும்பகோணம், அக். 16: கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி சுகாதார வளாகத்தை இரவு 8 மணிக்கு மேல் பூட்டி விடுவதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே 24 மணி நேரம் சுகாதார வளாகம் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் பழமைவாய்ந்த கோயில்கள் அதிகளவில் உள்ளன. இதனால் கும்பகோணம் பகுதிக்கு தினம்தோறும் வெளிமாநிலம், வெளிமாவட்டம், உள்ளூரை சேர்ந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் கும்பகோணம் பகுதியில் குத்துவிளக்கு பட்டறைகள் அதிகளவில் உள்ளதால் வியாபாரிகளும் வந்து செல்கின்றனர். இதனால் கும்பகோணம் பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். அதில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள், பொதுமக்கள், வணிகர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி சுகாதார வளாகத்தை பூட்டி வைத்து விடுகின்றனர். இதனால் இரவு மற்றும் அதிகாலையில் வரும் பெண்கள், முதியவர்கள், ஆண்கள் உள்ளிட்டோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பேருந்து நிலையத்தின் வடக்கு மூளையில் உள்ள சுகாதார வளாகத்துக்கு காசு கொடுத்து சென்றாலும் சற்று தொலைவில் இருப்பதால் பயணிகள் சென்று வருவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் பெரும்பாலானோர் பேருந்து நிலைய வளாகத்தின் ஓரங்களை கழிவுநீர் கழிப்பிடமாக மாற்றி விடுவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.