விருத்தாசலம், அக். 16: விருத்தாசலம் வி.என்.ஆர் நகரைச் சேர்ந்தவர் அப்துல்கபூர் மகன் ஜாபர் அலி(41). இவர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். தூங்கும்போது ஒரு விதமான சத்தம் கேட்பதுபோல் உணர்ந்துள்ளார். பின்னர் எழுந்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை பரிசோதித்து பார்த்துள்ளார். அப்போது தெருவில் ஒருவர் எவ்வித ஆடையுமின்றி நடந்து செல்வது சிசிடிவி கேமராவில் பதிவானதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அந்த வாலிபர் வீடுகளில் ஜன்னல் கதவுகள் வழியாக எட்டி பார்ப்பதும், படிக்கட்டில் ஏறுவதும் என அங்கும் இங்குமாய் அலைந்து திரிந்து கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள நாய்கள் குரைத்து அவரை பிடிக்க சென்றால் வேகமாக ஓட்டம் ஓடுவதும், நாய்கள் சென்ற பின் திரும்ப அப்பகுதிக்கு ஓடி வருவது போன்ற காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜாபர்அலி விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அதே பகுதியில் சுற்றி திரிந்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.