கடலூர், அக். 16: கடலூரில் நேற்று ஒரு நாள் பெய்த மழைக்கே மின் திட்ட பணிக்காக ேதாண்டப்பட்ட பள்ளத்தால் சாலை சேதமடைந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடலூர் கடலோர பகுதியில் அமைந்துள்ள நகர் என்ற நிலையில் இயற்கை சீற்றங்களினால் பல பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதற்கிடையே மின் திட்ட பணியை மேம்படுத்தும் வகையில் கடலூர் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின் புதைவட திட்ட பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்று கட்டங்களாக இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில் நத்தப்பட்டு முதல் ஆள்பேட்டை வரையிலான பகுதியில் வருகிற மார்ச் மாதம் பணி நிறைவடைகிறது. இதன் ஒரு பகுதியாக கடலூர் ஆள்பேட்டை, கோண்டூர், சாவடி, ரட்சகர் நகர், குறிஞ்சிநகர், ஜோசப் நகர், நத்தப்பட்டு, ராம்நகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 150 பகுதியில் சாலைகளின் இரு பக்கங்களிலும் பள்ளம் தோண்டப்பட்டு அதில் மின் கேபிள்கள் புதைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்கிடையே மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் போதிய திட்டமிடல்கள் இல்லாமல் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தோண்டப்பட்ட சாலை முழுவதும் சேதமடைந்து போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கடலூரில் நேற்று முன்தினம் இரவு பெய்து வந்த ஒரு நாள் மழைக்கே சாவடி, கோண்டூர், காவேரி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சாலை சேரும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்ல புறப்பட்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.