ராசிபுரம், அக்.16:ஆர்.புதுப்பாளையம் அரசு பள்ளியில், மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியை டிஇஓ துவக்கி வைத்தார்.ராசிபுரம் அருகே ஆர். புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியரும், நாமக்கல் மாவட்ட டிஇஓ (பொ) உதயகுமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இதில் மாணவ, மாணவிகளிடம் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அறிகுறிகள், அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வீட்டை சுற்றி எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் அரசு மருத்துவரிடம் சென்று ஆலோசித்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும். மேலும், நிலவேம்பு குடிநீரை அனைவரும் குடிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகள் ஆசிரிய ஆசிரியைகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் ராசிபுரம் ரோட்டரி சங்க நிர்வாகி திருமூர்த்தி, ரவி மற்றும் பொறுப்பாளர்கள், தல்லாகுளம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.